2026.06.09
பசுமை உலகை உருவாக்க பங்காளராவோம்
உலக சுற்றுச்சூழல் தினம் – 2026 ஐ முன்னிட்டு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் பசுமை அலுவலக முன்முயற்சி நிகழ்வு உற்சாகமாக முன்னெடுக்கப்பட்டது. உத்தியோகத்தர்கள் அனைவரும் பசுமை அலுவலக உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு, தங்களது கைரேகைகளை இலைகளாகப் பதித்து ஒரு பசுமை மரத்தை உருவாக்கினர். இந்த மரம் வெறும் கலைப் படைப்பு அல்ல; சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், வளங்களை பொறுப்புடன் பயன்படுத்தவும், நிலையான எதிர்காலத்தை உருவாக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்பதற்கான அடையாளமாகும். ஒவ்வொரு கைரேகையும் ஒரு உறுதி! ஒவ்வொரு செயலும் ஒரு பசுமையான நாளைக்கான முதலீடு!பசுமை அலுவலகத்தின் ஊடாக பசுமையான ஒரு உலகை உருவாக்க பங்காளராவோம்!


2026.06.05
சுற்றாடல் தின நிகழ்வுகள் 2026
உலக சுற்றாடல் தினமான இன்று உதவி திட்டமிடல் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் உதவி பிரதேச செயலாளரின் தலைமையில் ஒட்டுசுட்டான் சிவன் கோயிலை அண்மித்துள்ள பிரதான வீதியின் இருமருங்கிலுமுள்ள பார்த்தீனியக் களைகளை அகற்றும் பணிகளும் விழிப்புணர்வு செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந் நிகழ்வானது மாவட்ட விவசாயப் பணிப்பாளர், விவசாயப் போதனாசிரியர்கள், ஒட்டுசுட்டான் , வித்தியாபுரம் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பிரதேச மக்கள் , ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய ஆசிரியர் மற்றும் மாணவர்கள், ஒட்டுசுட்டான் பிரதேசசபை பணியாளர்கள் மற்றும் எமது அலுவலகப் பணியாளர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மாவட்ட விவசாயப் பணிப்பாளர் மற்றும் விவசாயப் போதனாசிரியர் எஸ்.பானுஜன் அவர்களின் பார்த்தீனியக் களைகளை சரியான முறையில் அகற்றும் விழிப்புணர்வு செயற்பாட்டின் கீழ் ஒட்டுசுட்டான் பிரதேச சபை பணியாளர்களின் வாகன வசதியுடன் சரியான முறையில் கழிவுகள் அகற்றப்பட்டு சிறப்பான முறையில் விவசாயக் கிளை உத்தியோகத்தர்களால் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





2026.06.04
பிரதேச விவசாய உற்பத்தி திறன் குழுக் கூட்டம் 2026
2026 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டிற்கான பிரதேச மட்ட விவசாய உற்பத்தி திறன் குழுக் கூட்டமானது பிரதேச செயலாளர் (பதில்) திரு இ.றமேஸ் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.
விவசாயத்தில் நவீனமயமாக்கல் திட்டங்களை ஊக்குவித்தல், விவசாய நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்க்கும் கையில் நடாத்தப்பட்ட இக் கலந்துரையாடலில், பிரதேச செயலகத்தால் இடம் பெறும் விவசாயத் திட்டங்கள் தொடர்பாக பிரதேச செயலாளர் அவர்கள் விளக்கமளித்துள்ளதுடன், இலங்கை வங்கியால் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய கடன் திட்டங்கள் தொடர்பாக வங்கி முகாமையாளர் அவர்கள் விளக்கமளித்திருந்தார்.
மேலும், முத்தையன்கட்டுப் பிரிவில் நீர்ப்பாசனப் பொறியியலாளர் அவர்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது. அத்துடன், கமநல சேவைகள் நிலையம் ஒட்டுசுட்டான் ,கமநல சேவைகள் நிலையம் ஒலுமடு, கமநல காப்புறுதி சபை, கால்நடை வைத்திய அதிகாரிகள் திணைக்களம், விவசாயப் போதனாசிரியர்கள், வனவள திணைக்களம், வனவிலங்கு திணைக்களம், mullai agri business ltd,Golden papaya ltd, கமக்கார அமைப்பு, கிராம அலுவலர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நடைமுறையிலுள்ள விவசாய திட்டங்கள், நடைமுறைப்படுத்தப்படும் விவசாய திட்டங்கள் மற்றும் விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக இங்கு கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





2026.05.14
முதலாவது பிரேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் - 2026
2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது பிரேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது கடந்த 14.05.2026 அன்று, அபிவிருத்திக் குழு தலைவரும் கௌரவ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமகிய செ.திலகநாதன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரப்பமாகியிருந்தது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களுடைய அனைத்து விதமான அபிவிருத்திகளும் குறிப்பாக வீதியமைத்தல், குளப்புனரமைப்பு, கட்டுமானம் விவசாயம், வாழ்வாதாரம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், மருத்துவம், கலாச்சாரம் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பான பல ஆக்கபூர்வமான விடயங்கள் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டிருந்தன. அந்தவகையில், அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சவாலான விடயங்கள் மற்றும் அவற்றிலுள்ள இடைவெளிகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான ஆரோக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன. இதன் போது கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பொருத்தமான பதில்களை கௌரவ அபிவிருத்திக்குழு தலைவர், மதிப்பார்ந்த பிரதேச செயலாளர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
மேலும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், திரு காதர் மஸ்தான் மற்றும் ப. சத்தியலிங்கம் ஆகியோரும், மதிப்பார்ந்த பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களம் சார்ந்த உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கௌரவ புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் மற்றும் ஏனைய கௌரவ உறுப்பினர்கள் ஆகியோரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கக்கூடிய ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோரும் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தமை குளிப்பிடத்தக்கது.





















