2026.05.13
சமூக பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு
பொதுமக்களுக்கான சேவைகளை விரைவாகவும் இலகுவாகவும் வினைத்திறனாகவும் ஒரே இடத்தில் வழங்குவதனை பிரதான நோக்கமாகக் கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட சமூக பராமரிப்பு நிலைய கட்டிடமானது சிறப்பான முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அதிதிகள் அனைவரும் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாண்ட் வாத்திய மாணவர்களால் வரவேற்கப்பட்டதுடன், நிகழ்வின் மதிப்புறு விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருந்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வேதநாயகன், மேன்மை தங்கிய இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் H.E Matthew Duckworth, மாவட்ட அரசாங்க அதிபர் திரு அ. உமாமகேஸ்வரன் ஆகியோர் குறித்த நிலையத்தினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்திருந்தனர்.
சிறுவர்கள, பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த பிரஜைகள் ஆகியோர் பெற்றுக் கொள்கின்ற 60 க்கும் மேற்பட்ட சேவைகளை குறித்த நிலையத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில், வடமாகாண சபையின் மகளீர் விவகார அமைச்சு மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துடன் இணைந்து அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் ஆதரவுடன் குறித்த நிலையமானது செயல்படுத்தப்படுகிறது.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வின் வரவேற்புரையினை பிரதேச செயலாளர் திரு இ. நிசாந்தன் அவர்கள் வழங்கியிருந்தார். சமூக பலாமரிப்பு நிலையத்தின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் திரு M. நந்தகோபாலன் அவர்கள் விளக்கமளித்திருந்தார். தொடர்ந்து Mr. Johann Rebert, Country Representative, Asia Foundation, மாவட்ட அரசாங்க அதிபர் திரு அ. உமாமகேஸ்வரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வேதநாயகன் இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் H.E Matthew Duckworth ஆகியோர் தங்களது கருத்துரைகளை வழங்கியிருந்தனர். இறுதியாக வடக்கு மாகாண சமூகசேவை திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி தனுயா லுக்சாந்தன் அவர்கள் நன்றியுரையினை வழங்கியிருந்தார்.
மேலும் இந் நிகழ்வில், வடக்கு மாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் திரு M. நந்தகோபாலன், Mr. Johann Rebert, Country Representative, Asia Foundation, திரு A. சுபாகரன், Exe Director, Strenthening Governance Program, Asia Foundation, Mr. Xin Shi, First Secretary, Australian High Commission, வடக்கு மாகாண சமூகசேவை திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி தனுயா லுக்சாந்தன் மற்றும் உதவி பிரதம செயலாளர், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




2026.05.08
நடமாடும் சேவை-2026
மதிப்பார்ந்த பிரதேச செயலாளர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் தயார்படுத்தலின் கீழ் திருமுறிகண்டி கிராம மட்ட பொது அமைப்புகளின் முழுமையான அனுசரணை மற்றும் ஒழுங்குபடுத்தலுடன் திருமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவின் பொது மண்டபத்தில் குறித்த நடமாடும் சேவையானது சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தது.
பிரதேச செயலகத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படுகின்ற அனைத்து விதமான சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் நடைபெற்ற நடமாடும் சேவையில், திருமுறிகண்டி, இந்துபுரம் மற்றும் பனிக்கன்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர். அத்துடன், குறித்த நடமாடும் சேவையில் குறிப்பிட்ட சில மக்களுக்கான பூரண அளிப்பு பத்திரம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




2026.04.16
சூரியகாந்தி சிறுவர் இல்ல சிறுவர்களுக்கான பயிற்சி வகுப்பு
பண்டாரவன்னி கிராம அலுவலர் பிரிவிலுள்ள சூரியகாந்தி சிறுவர் இல்ல சிறுவர்களுக்கு LIFE SKILLS DEVELOPMENT, PROBLEM SOLVING, CHILD PROTECTIN, CREATIVITY ஆகிய விடயங்களிலான பயிற்சி வகுப்பானது நடைபெற்றிருந்தது.
குறித்த பயிற்சி வகுப்பின் வளவாளராக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு ம. வினோத் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் JSAC நிறுவனத்தினர் பிள்ளைகளுக்கான மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


2026.04.20
சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தை
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சிறு கைத்தொழில் பிரிவு ஆகிய திணைக்களங்களால் புத்தாண்டு சந்தை நிகழ்வானது மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தது.
குறித்த சந்தை நிகழ்வினை மதிப்பார்ந்த பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்த வகையில் ஆரம்பித்து வைத்திருந்தனர். உள்ளூர் உற்பத்திப் பொருட்களை உற்பத்தியாளர்கள் சந்தைப்படுத்துவதற்கான ஒரு களமாக குறித்த சந்தை நிகழ்வு அமைந்திருந்ததுடன் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





2026.03.28
சிறுவர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
சிறுவர்களின் ஆளுமை விருத்தி மற்றும் பாதுகாப்பு விடயங்களை முன்னெடுக்கும் வகையில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகள் தோறும் உருவாக்கப்பட்டுள்ள சிறுவர் கழகங்களின் செயற்பாடுகளை செயற்திறன் மிக்கதாக உருவாக்கும் வகையில் மாங்குளம் மற்றும் பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த சிறுவர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், மாவட்ட செயலாளர் திரு அ. உமாமகேஸ்வரன், பிரதேச செயலாளர் திரு இ. நிசாந்தன், உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரம்மியா தினேஸ்குமார் ஆகியோருடன் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், கிராம அலுவலர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறுவர் கழகங்களுடைய செயற்பாடுகள் தொடர்பாக பார்வையிட்டதுடன் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.




















