2026.01.10
பாடசாலை மத்தியஸ்த சபை உருவாக்கம் தொடர்பாக மாணவர்களுக்கான கருத்தரங்கு
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மத்தியஸ்த அலகின் ஏற்பாட்டில் மத்தியஸ்த சபை உருவாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக அதிபர் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான தெளிவூட்டும் பயிற்சிப்பட்ட றை மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கின் வளவாளராக மத்தியஸ்த சபையின் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் திரு. ச .லக்ஸ்மன் மற்றும் சங்கானை பிரதேச செயலகத்தின் மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. க. தினேஸ்குமார் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வின் ஒழுங்கமைப்பாளராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜோ. சிவரஞ்சினி அவர்கள் கலந்து கொண்டார். இவர்கள் தமது விரிவுரையில் மத்தியஸ்த சபை தோற்றம், செயற்பாடு, பிணக்குகளை தீர்க்கும் பொறிமுறை என்பவற்றுடன் மத்தியஸ்த சபையின் உறுப்பினர் நியமனம் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியிருந்தனர்.


2025.12.26
கிராமிய சிறுவர் பாதுகாப்பு குழு உறுப்பினர்களை வலுவூட்டும் பயிற்சி நெறி
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 27 கிராம அலுவலர் பிரிவுகளிலும் செயற்பட்டுவரும் கிராமிய சிறுவர் பாதுகாப்புக் குழுவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை வலுவூட்டும் விழிப்புணர்வு பயிற்சி நெறியானது, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரது ஒழுங்குபடுத்தலில் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
நிகழ்வின் ஆரம்பத்தில் சிறுவர் தொடர்பாக இருக்கக்கூடிய அடிப்படை சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக உதவி பிரதேச செயலாளர் திரு. செ. சாருதர்ஷன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வினை வழங்கியிருந்தார். தொடர்ந்து, சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் உரிமைகள் மற்றும் கடமைகள், அடிப்படை உளசமூக திறன்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கினை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு ம. வினோத் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு வழங்கியிருந்தார்.
குறித்த பயிற்சி வகுப்பில் தெரிவு செய்யப்பட்ட கிராமிய சிறுவர் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்ததோடு, குறித்த வலுவூட்டல் பயிற்சி நெறியானது தொடர்ச்சியாக காலத்துக்கு காலம் வழங்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



2025.12.23
மூன்றாவது பிரேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் - 2025
2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது பிரேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது அபிவிருத்திக் குழு தலைவரும் கௌரவ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமகிய செ.திலகநாதன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஆரப்பமாகியிருந்தது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களுடைய அனைத்து விதமான அபிவிருத்திகளும் குறிப்பாக வீதியமைத்தல், குளப்புனரமைப்பு, கட்டுமானம் விவசாயம், வாழ்வாதாரம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், மருத்துவம், கலாச்சாரம் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பான பல ஆக்கபூர்வமான விடயங்கள் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டிருந்தன. அந்தவகையில், அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சவாலான விடயங்கள் மற்றும் அவற்றிலுள்ள இடைவெளிகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான ஆரோக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன. இதன் போது கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பொருத்தமான பதில்களை கௌரவ அபிவிருத்திக்குழு தலைவர், மதிப்பார்ந்த பிரதேச செயலாளர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
மேலும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் ப. சத்தியலிங்கம் ஆகியோரும், மதிப்பார்ந்த பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களம் சார்ந்த உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கௌரவ புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் மற்றும் ஏனைய கௌரவ உறுப்பினர்கள் ஆகியோரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கக்கூடிய ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோரும் இராணுவ அதிகாரி மற்றும் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தமை குளிப்பிடத்தக்கது.



2025.12.24
சிறந்த பெற்றோர் ஆகுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பிள்ளைகளுடன் சிறந்த ஆரோக்கியமான பெற்றோர்களாக இருத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நிர்வாக உத்தியோகத்தர் திருமதி செ. ஜெயந்தி தலமையில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்ச்சியின் வளவாளராக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு ம. வினோத் என்பவர் கலந்து கொண்டதுடன், பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



2025.12.17
பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்தி மற்றும் பால், பால்நிலை சமத்துவம் தொடர்பான கலந்துலையாடல்
2025 ஆம் ஆண்டிற்குரிய நான்காவது காலாண்டுக்கான கூட்டமானது, உதவி பிரதேச செயலாளர் தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும், கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான மீளாய்வு செய்யப்பட்டதுடன் சிறுவர் பாதுகாப்பு, கல்வி, போக்குவரத்து, போசாக்கு, சுகாதாரம், போதைப் பொருள் பாவனை மற்றும் அறநெறிக் கல்வி தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் ஆரோக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன.
அத்துடன், பால் பாலநிலை சமத்துவம் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டதுடன் நடைபெற்ற வெள்ள அனர்த்த நிலையினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான உதவித் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துலையாடப்பட்டிருந்தன.
பொலிஸ் அதிகாரிகள், மதுவரி திணைக்கள அதிகாரி, வலயக்கல்வி அதிகாரிகள், பிரதேச சபை உத்தியோகத்தர், பொதுசுகாதார பரிசோதகர்கள, சுகாதார மருத்துவ மாது, பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பிரதேச செயலக துறைசார் உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பலரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

















