2026.07.27
நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா
நேர்மையான, ஊழலற்ற மற்றும் திறமையான அரச சேவையை நோக்கிய புதிய பயணம்!
நேர்மையான அரசு சேவைக்கான ‘நேர்மைக்குக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய செயற்றிட்டத்தின் கீழ் அரசு சேவையின் தரம், செயல்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்காக, ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு ‘நேர்மை மிக்க வாரம்’ பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் காலை 9.00 மணியளவில் "சட்டத்தை மதிக்கும் நேர்மை மிக்க அரச சேவை" எனும் கருப்பொருளின் கீழ் உத்தியோகத்தர்களின் விசேட சத்தியப்பிரமாண நிகழ்வு இனிதே நடைபெற்றது.
தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானது. நேர்மை, பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, மக்களுக்கு என்றும் சிறந்த மற்றும் திறமையான சேவையை வழங்குவதாக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் மனப்பூர்வமாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.



















