2026.06.20
தலமைத்துவ பயிற்சியும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
கிராமிய மட்ட சிறுவர் கழக அங்கத்தவர்களுக்கான தலமைத்துவ பயிற்சியும் அவர்களுக்கான பயனுள்ள விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கின்ற நிகழ்வும் கிராம அலுவலர் தலமையில் முத்துவிநாயகபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வினை கிராம அலுவலர் அவர்கள் ஆரம்பித்து வைத்திருந்தார். தொடர்ந்து குறித்த நிகழ்விற்கான நிதியனுசரணைகளை வழங்கியிருக்கக் கூடிய NAZARENE COMPASSIONATE MINISTRIES OF LANKA ((NCMLANKA) நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் அவர்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தொடர்பாக தனது கருத்துக்களை வழங்கியிருந்தார்.
தொடர்ந்து தலமைத்துவம் (LEADERSHIP) தொடர்பான பயிற்சி நெறியானது சிறுவர் கழக அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. குறித்த பயிற்சியின் வளவாளராக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு வினோத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் பிள்ளைகளுக்கான பயிற்சி நெறியினை வழங்கியிருந்தார். அத்துடன் NCMLANKA நிறுவன உத்தியோகத்தரும் பிள்ளைகளுக்கான பயனுள்ள விளையாட்டு நிகழ்வுகளையும் நடத்தியிருந்தார்.
நிகழ்வின் இறுதியில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரின் வழிகாட்டல் கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முத்துவிநாயகபுரம், முத்தையன்கட்டுக்கும், கற்சிலைமடு மற்றும் கனகரத்தினபுரம் ஆகிய நான்கு கிராமிய சிறுவர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





















