2025.09.19
ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகமும், கலாசார பேரவையும், மாங்குளம் முத்தமிழ் கலாமன்றமும் இணைந்து நடாத்திய ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு விழாவானது மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் அமைக்கப்பட்ட சரவணமுத்து யோகேஸ்வரன் அரங்கில், மதிப்பார்ந்த பிரதேச செயலாளரும் கலாச்சார பேரவையின் தலைவருமான திரு. இ. நிஷாந்தன் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தது.
தமிழர் தம் வாழ்வியல், விழுமியங்கள் மற்றும் சமய, கலாச்சார வெளிப்பாடுகளுடன் அமைந்த பேரணிகள், பாரம்பரிய நடனங்கள், ஊர்திகள் சகிதம் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன், இயல் இசை நாடகம் எனும் முத்தமிழினையும் பிரதிபலிக்கும் வகையில் அரங்க நிகழ்வுகளும் நிகழ்வினை மென்மேலும் சிறப்பித்திருந்தன.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மதிப்பார்ந்த மேலதிக மாவட்ட செயலாளர்களான திரு. சி. குணபாலன் ( நிர்வாகம்), திரு. சி. ஜெயகாந்த் (காணி), மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதி பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஷ், துணுக்காய் வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி.அன்னமலர் சுரேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் மூத்த கலைஞர் திரு.கந்தையா செல்வராசா அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு நிகழ்வினை கௌரவித்து சிறப்பித்ததுடன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாக மதிப்பார்ந்த உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்கள தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், உத்தியோகத்தர்கள் , கலை ஆர்வலர்கள், கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

















